×

கோவை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல்; கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

கோவை: கோவை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2 நாட்களுக்கு முன்பு தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஏசி வென்டிலேட்டர் குழாய் வழியாக புகுந்த மர்ம நபர் 200 பவுன் அளவுக்கான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார். கொள்ளையடிக்க வருவோர் மொத்தமாக ரேக்கில் இருந்து நகைகளை அள்ளிச்செல்வர். ஆனால், இந்த கடைக்குள் நுழைந்த கொள்ளையன், சட்டையால் தலையில் முக்காடு அணிந்து மைனர் செயின், பிரேஸ்லெட், வளையல், மோதிரம், ஆரம் என திருமணத்திற்கான நகைகளாக பார்த்து தேர்வு செய்து கொள்ளையடித்திருப்பது சிசிடிவியில் பதிவானது.

5 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கோவை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 200 சவரன் கொள்ளை என தகவல் வெளியான நிலையில் 2.7 கிலோ தங்கம் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது. அரூரைச் சேர்ந்த கொள்ளையன் வீடு, ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தனி ஆளாக நகைக்கடையில் 2.7 கிலோ தங்க நகைகளை விஜயகுமார் கொள்ளையடித்துச் சென்றார். கொள்ளை போன 48 மணி நேரத்தில் அனைத்து நகைகளையும் போலீசார் மீட்டனர். நகைகளை பறிமுதல் செய்த போலீசார், கொள்ளையன் விஜயகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர். ஓரிரு நாளில் கொள்ளையனும் அவருக்கு உதவிய நண்பரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கோவை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல்; கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,KOWAI JEWELRY STORE ,José Alucas Jewelry Store ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை